search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு"

    சேலம் அருகே புதியதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    சேலம் அருகே வீராணம் பகுதியில் சீலாவரி ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகே செல்லும் சாலையின் இருபுறங்களிலும் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த பகுதி இயற்கை சூழல் ரம்மியமாக இருப்பதால் மேலும் அங்கு ஒரு டாஸ்மாக் கடையை திறக்க அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    3-வதாக ஒரு டாஸ்மாக் கடை அங்கு அமைக்கப்பட இருப்பது குறித்த தகவல் அறிந்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இன்று காலை அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து ஏரி அருகே உள்ள 2 டாஸ்மாக் கடைகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அவர்கள், கடை முன்பு அமர்ந்து வேண்டாம், வேண்டாம் டாஸ்மாக் கடை வேண்டாம். அகற்று, அகற்று டாஸ்மாக் கடையை உடனே அகற்று என பல்வேறு கோ‌ஷங்களை முழங்கினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஏற்கனவே உள்ள 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்றக்கோரி நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடையை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்து செய்திருப்பது வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது.

    இங்கு மது குடிக்க வரும் குடிமகன்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. மது குடித்து விட்டு நடுரோட்டில் சண்டை போடுகிறார்கள். அவர்களது சண்டையினால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பயப்படுகிறார்கள். மது போதையில் கேலி, கிண்டலும் செய்கிறார்கள். ஆகவே, இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அதற்கு போலீசார், உயர் அதிகாரிகளிடம் இது பற்றி பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள்.
    பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு முன்பு அமர்ந்து, கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் ஊட்டத்தூர் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி செய்தனர். அப்போது ஊத்தங்கால் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் வீரமுத்து தலைமையில், எதிர்ப்பு தெரிவித்து கடைக்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். 

    அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர் கடையை திறக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனையடுத்து இரு தரப்பினரையும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மாலையில் மீண்டும் டாஸ்மாக் கடையை திறந்ததால், ஊத்தங்கால் பொதுமக்கள் கடைக்கு முன்பு அமர்ந்து இரவு 10 மணி வரை தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். 

    இந் நிலையில் நேற்று காலை ஊத்தங்கால் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு முன்பு அமர்ந்து கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு தரப்பினர் கடையை திறக்க வேண்டும் எனக் கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து போலீசார் மற்றும் டாஸ்மாக் அலுவலர்கள் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கடை திறக்கப்படாது என தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து 2 நாளாக டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கடை திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
    சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் புதியதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிரிப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    சென்னை சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தன. இதை அறிந்த அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட திட்டமிட்டனர்.

    நேற்று இரவு புதிய கடையை திறப்பதற்கு மதுபானங்கள் வந்து இறங்கியதாக தெரிகிறது. மதுக்கடையினை இன்று திறக்க இருப்பதாக அறிந்த மக்கள் கடையின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்று திரண்டு கடையின் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வை சேர்ந்த பாண்டியன், தட்சணா மூர்த்தி, தி.மு.க. பகுதி செயலாளர் மதன் மோகன், வட்ட செயலாளர்கள் பிரபாகரன், மகேஷ், ஜெகதீசன், காங்கிரஸ் சண்முகம், பா.ஜனதா தாமரை கங்காதரன், அரங்கண்ணல் மற்றும் அப்பகுதி பெண்களும் சாலையில் அமர்ந்து கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள். காவிநாயகன் தெருவில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    இதுகுறித்து தி.மு.க. பகுதி செயலாளர் மதன் மோகன் கூறியதாவது:-

    ‘‘இந்த பகுதியில் மதுக்கடையை திறக்க ஒரு வருடமாக முயற்சி செய்து வருகிறார்கள். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இது குடியிருப்பு பகுதி மட்டுமல்ல பல்வேறு தொழில் செய்யக் கூடியவர்களும் வியாபாரம் செய்கின்றன. இங்கு மதுக்கடை திறந்தால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். பெண்களின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும்.

    அதனால் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கட்சிகளை கடந்து பகுதி மக்களாக எதிர்த்து போராடுகிறோம். இங்கு கடை திறக்க மாட்டோம் என்று எழுத்து பூர்வமாக கொடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றார்.

    மறியலில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மதுக்கடையை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அப்போதுதான் கலைந்து செல்வோம் என்று கூறினர்.
    ×